தாளவாடியில் தெப்ப திருவிழா; மழை வேண்டி விவசாயம் செழிக்க சிறப்பு பூஜைகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 11:33 AM IST

thumbnail

ஈரோடு: தமிழக கர்நாடக எல்லையான தாளவாடி அடுத்துள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் கணபதி பூஜையுடன் திருவிழா தொடங்கப்பட்டது.

சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டு, வீதி உலா நடைபெற்றது. ரங்சாமி, மல்லிகார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள், மலர்களால் அலங்ரிக்கபட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு திகனாரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. 

பின்னர் சப்பரம் தெப்பத் திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து, சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பக்தர்கள், குளத்தின் நடுப்பகுதிக்கு சப்பரத்தை சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர் வடிவில் இருந்த தெப்பத்தில், சப்பரம் வைக்கபட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது. 

பக்தர்கள் குளத்தின் கரையில் நின்று தெப்பத் திருவிழாவை கொண்டாடினர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

தெப்ப திருவிழாவிற்கு தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால், பாதுகாப்பு பணிக்காக தாளவாடி ஆய்வாளர் செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.