போகாதீங்க டீச்சர்..... பிரிய மனமில்லாமல் அழுத பள்ளி மாணவர்கள்!
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த மலைக்கிராமமான பாஸ்மார்பெண்டா கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பாஸ்மார்பெண்டா மலைக்கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களை எடுத்ததாகவும்; இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மேல் படிப்பிற்காக பேரணாம்பட்டு பகுதியில் உள்ள பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மேல்நிலைப் படிப்பில் சேர முடியாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இதற்குக் காரணம் சென்ற கல்வி ஆண்டில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வந்ததாக மாணவர்களும் பெற்றோர்களும் கூறினார்கள். மேலும் இந்தப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும் பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியினை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்தப் பள்ளியில் ஓர் ஆண்டாக தற்காலிகமாக பணியாற்றி வந்த ரோஸ்லின் என்பவரை தற்போது வேலையில் இருந்து நிறுத்துவதாக கூறி, வேறொரு ஆசிரியரை நியமனம் செய்தனர். ஆசிரியரை பிரிய மனமில்லாமல் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் அழுதனர்.