தீக்குண்டத்தில் தவறி விழுந்த குழந்தை... தந்தையின் நேர்த்திக்கடனால் நேர்ந்த விபரீதம்!
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் தனது கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு கடந்த ஆடி மாதம் 1 ஆம் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் தனது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணமாக திரௌபதி அம்மனுக்கு ஆடி மாதம் 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு தனது 1 வயது பெண் குழந்தை தர்ணிஜாவை தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி தீக்குண்டத்தில் குழந்தையுடன் தவறி விழுந்தார். ராஜா தனது குழந்தையுடன் திடீரென தீக்குண்டத்தில் விழுந்ததைக் கண்ட கிராமத்தினர் உடனடியாக ராஜாவையும் குழந்தையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனையடுத்து உடல் முழுவதும் 36 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கும் குழந்தை, மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆடி மாதத்தில் அம்மனுக்கு காப்பு கட்டி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற 1 வயது பெண் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய தந்தை, குழந்தை உடன் தீக்குண்டத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.