இடைமறித்த காட்டு யானை - தலைகுப்புற கவிழ்ந்த வாகனஓட்டி.. திக் திக் நிமிடங்கள்!
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை சாலை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் வனச்சோதனைச் சாவடியில் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தலமலையில் இருந்து திம்பத்துக்கு கோவையைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் காளி திம்பம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே யானை நிற்பதை பார்த்து காரை நிறுத்தி செல்போனில் யானையை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திம்பத்தில் இருந்து நெய்தாளபுரதுத்கு இரு சக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே யானை நின்றதை பார்த்தவுடன் அவர் செய்வதறியாது வாகனத்தை சாலையின் ஓரமாக செலுத்தினார். யானையை பார்த்த அதிர்ச்சியில் இருந்த முதியவர் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்துடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தார்.
அப்போது காரில் வந்தவர்கள் யானை முதியவர் அருகே வாரத படி அதிக ஒலியுடன் ஹாரன் எழுப்பினர். இதற்கிடையே கீழே விழந்த முதியவர் மேலே எழுந்து வந்த போது அவரை காரில் வந்தவர்கள் காப்பாற்றினர். நூலிழையில் முதியவர் உயிர் தப்பிய திகைக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.