தஞ்சாவூரில் நரிக்குறவர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 12:05 PM IST

thumbnail

தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஜன.15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ரவிச்சந்திரன், தஞ்சாவூரில் செயல்படும் 'அன்பாலயம்' மனநல காப்பகத்தில் இன்று பொங்கல் வைத்து, அங்கிருந்தவர்களுடன் தனது பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

மேலும், அங்கிருந்தவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, அவர்களை உற்சாகப்படுத்தியதோடு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல, தஞ்சாவூர் அருகே நரிக்குறவர்கள் குடியிருப்பில், நரிக்குறவ மக்கள் அனைவரும் ஒன்று கூடி முதல்முறையாக 'சமத்துவ பொங்கல் விழா' கொண்டாடி மகிழ்ந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேலஉளூர் நரிக்குறவர்கள் குடியிருப்பில் வசிக்கும் 102 நரிக்குறவ குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, முதல் முறையாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரைப்படி தங்களது வீடுகளின் முன் வண்ண கோலங்களில் சமத்துவ பொங்கல் வாழ்த்துகள் என்று எழுதி உலக மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். புதிய பானைகளில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர். முன்னதாக நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்ற ஏராளமான நரிக்குறவ மக்கள் சினிமா பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடி உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.