வீடியோ: முழு வீச்சில் நடைபெற்று வரும் வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுர பகுதியில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. அதில் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது. அதன்பின் தமிழ்நாடு சிற்ப கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி மண்டபத்தை புரைமைக்க திட்டமிட்டு தமிழக அரசு ரூ. 18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த வகையில் வீரவசந்தராயர் மண்டபத்தில் 23 அடி உயரம் உள்ள 16 கல்தூண்கள் சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரியிலிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஜூலை 17ஆம் தேதி கனரக வாகனங்கள் மூலமாக மதுரைக்கு கொண்டுவரப்பட்டன.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான கூடல்செங்குளம் கிராமத்தில் சிற்ப பணிக்காக கற்கள் இறக்கப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 2ஆவது முறையாக 50 டன் எடை உள்ள கற்கள் 3 லாரிகள் மூலம் கூடல் செங்குளத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டன. கோயில் சிற்பக்கலை வடிவமைப்பாளர் (ஸ்தபதி) என்றழைக்கப்படும் திருப்பூரை சேர்ந்த கட்டட கலைஞர் வேல்முருகன் தலைமையில் 20 பேர் கொண்ட சிற்ப குழுவினர் தங்கி இருந்து வீரவசந்தராயர் மண்டபத்திற்காக 10 அடி, 15 அடி உயரத்தில் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு கற்களை வெட்டி சிற்ப வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பழமை மாறாமல் ஒவ்வொரு கல் தூணையும் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்து அதனை கோவில் வளாகத்தில் உள்ள சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தில் கொண்டு வந்து மறு சீரமைப்புச் செய்யும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.