தமிழக - கர்நாடகா மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம்..! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!
Published : Nov 12, 2023, 8:28 AM IST
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கிராமம் வழியாகத் தமிழக - கர்நாடகா செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் சிறுத்தையானது சாலையைக் கடந்து சென்றதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, பேரணாம்பட்டு சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால், சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், மலைப்பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம், இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றாக இணைந்து செல்லுமாறும், இரவு நேரங்களில் மலைப்பாதை வழியாக வர வேண்டாம், பகல் நேரங்களில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுங்கள் என பத்திரப்பல்லி வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் மலைப்பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனவும், மலைப் பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.