viral: ஜாக்கிரதை ஜாக்கிரதை தங்கச்செயின் ஜாக்கிரதை; பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்
திருவண்ணாமலை: கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் போக்குவரத்து தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர், சிவபெருமான். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் இயக்கக் கூடாது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், மூன்று நபர்கள் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பெற்றோர்களைப் பாதுகாப்பாக காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் போக்குவரத்து தலைமைக் காவலர் சிவபெருமான் சித்ரா பௌர்ணமியினை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சிவபெருமான், கிரிவலம் வரும் பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனப் பல்வேறு வகையான நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள், என மெட்டில் பாடல்களைப் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் கடும் வெயிலில் போக்குவரத்துக் காவலர் பணியில் ஈடுபட்டுக் கொண்டு விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி வருவது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாடல்கள் பாடுவதை நின்று வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள் தலைமைக் காவலரின் முயற்சியைப் பாராட்டியும், வாழ்த்தியும் செல்கின்றனர்.