கடம்பூர் சாலையில் நின்ற பைக்கை துவம்சம் செய்த யானை - வெளியான அதிர்ச்சி வீடியோ!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது மூங்கில் தூர்கள் காய்ந்து போனதால் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீரைத் தேடி சாலையை கடந்து செல்கின்றன. கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் செல்லும் சாலை வனத்தின் நடுவே அமைந்து உள்ளதால் யானைகள் பிரச்னை காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை அச்சத்துடனே ஓட்டி செல்கின்றனர்.
இந்த நிலையில், கடம்பூரில் இருந்து இருட்டிபாளையத்துக்கு வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 21வது மைல் கல் என்ற மேடான பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய ஆண் யானை சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் யானை சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். ஆனால், யானை இரு சக்கர வாகன ஓட்டிகள் நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவர்களை நோக்கி ஓடி வந்தது.
இதனால் அங்கிருந்த ஒருவர் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பியோடி உள்ளார். இருப்பினும், சாலையில் இருந்த இருசக்கர வாகனத்தை தந்தத்தால் யானை தாக்கி உள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் துரத்தினர். யானைகள் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.