சிதம்பரம் நடராஜர் கோவிலில் மனநலம் பாதித்த பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் - சிசிடிவி வெளியீடு!

By

Published : Jun 25, 2023, 10:55 AM IST

thumbnail

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த 23ஆம் தேதி காலையில் சுமார் 11 மணியளவில், சிவபுரி சாலை பகுதியைச் சேர்ந்த கார்வண்ணன் (61) என்பவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். கோவில் வளாகத்தில் உள்ள 21 படிக்கட்டு பகுதியில் சாமி உலா வந்துள்ளது. அப்போது, கார்வண்ணன் எதிரில் நின்றதாக கூறப்படுகிறது. 

கார்வண்ணனை வழியிலிருந்து தள்ளிப்போகும்படி தீட்சிதர்கள் கூறியதையடுத்து, கார்வண்ணனுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கனகசபாபதி, ஸ்ரீவர்ஷன் ஆகிய இரண்டு தீட்சிதர்களும் கார்வண்ணனை தாக்கியதாகத் தெரிகிறது. 

இதில் காயமடைந்த கார்வண்ணன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கார்வண்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிதம்பரம் நகரப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது கார்வண்ணனை தீட்சிதர்கள் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.  

இதையடுத்து, தீட்சிதர்கள் கனகசபாபதி, ஸ்ரீவர்ஷன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீட்சிதர்களின் இந்தச் செயல் சிதம்பரம் கோவிலில் சர்ச்சையினையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தீட்சிதர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பக்தரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதையும் படிங்க: சென்னை மாநகர க்ரைம் செய்திகள் : கார் மோதி ஒருவர் பலி, திமுக நிர்வாகி வீட்டில் ஜிஎஸ்டி அலுவலர்கள் சோதனை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.