அண்ணாமலையார் கோவில் பங்குனி மாதம் பிரதோஷம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

By

Published : Mar 20, 2023, 11:28 AM IST

thumbnail

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ தினமான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து தேவாரம் திருப்புகழ் பக்தி பாடல்கள் பாடப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனையை கண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.

பிரதோஷ தினத்தின் போது நந்தியை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற பங்குனி மாத தேய்பிறை பிரதேஷத்தில் கலந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.