வால்பாறை ஊராட்சிப்பள்ளியில் மதிய உணவு உண்ட 25 மாணாக்கர்களுக்கு திடீர் வாந்தி,மயக்கம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18364763-thumbnail-16x9-valparai.jpg)
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்டாண்மோர் சந்திப்பு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) இங்கு மதிய உணவு உண்ட சுமார் 60 மாணவ, மாணவிகளில் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் இடியும் நிலையில் பராமரிப்பு இன்றி இருப்பதால், அதில் விஷப் பூச்சிகள் இருந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம், திடீர் உடல் நலப் பாதிப்பிற்கான காரணத்தை அறிய மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இதனை அறிந்த வால்பாறை பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நகராட்சி நகர மன்றத் தலைவி, செயற்பொறியாளர் வெங்கடாசலம், கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.