ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
சேலம்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் கௌசல்யா(20). பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணிக்கு செல்லும் அவர் தினமும் பேருந்து மூலம் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கௌசல்யா தனது தங்கையுடன் கார்மெண்ட்ஸ் நிறுவன பணிக்கு சென்று விட்டு மாலை பேருந்து மூலம் வீடு திரும்புவதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தனது தங்கையை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அவர் நின்றபடி பயணித்தார்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திரா திரையரங்கு வளைவில் அதிவேகமாக சென்ற பேருந்து திரும்பிய போது படிக்கட்டு ஓரத்தில் நின்றிருந்த கொளசல்யா, பிடிமானம் நழுவி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பேருந்தில் இருந்து இளம்பெண் கெளசல்யா கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அருகே இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலுன்ற முடியாமல் மூக்குடைந்துள்ளனர்" - உதயநிதி ஸ்டாலின் சூசகப் பேச்சு