Viral Video: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-08-2023/640-480-19170636-thumbnail-16x9-ko.jpg)
கோவை: குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணகுமார்(45) . இவர் நேற்று இரவு தனது காரில் வீட்டில் இருந்து ஆர்.எஸ்.புரம் சென்றுள்ளார். அப்போது டிபி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவரது கார் முன் பக்கத்தில் இருந்து புகை வெளியேறியது.
உடனடியாக கிருஷ்ணகுமார் காரை நிறுத்திவிட்டு, இறங்கி சென்று பரிசோதித்தபோது தீ மளமளவென பிடித்தது. காரின் முகப்புப் பகுதியில் தீ எரிந்ததை அறிந்த அந்தப் பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதை அடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
காரில் உள்ள எலக்ட்ரிக் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பிடித்து விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.