சென்னையில் தொடர் கனமழையால் சாலையில் விழுந்த பழமை வாய்ந்த மரம்!
Published : Dec 4, 2023, 10:28 AM IST
சென்னை: வங்கக் கடலில் சென்னைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் அடுத்த தொழிற்பேட்டையில் உள்ள ஐடி பயிற்சி நிறுவனம் அருகே மிகப்பெரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று நள்ளிரவு வேரோடு முறிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இருப்பினும், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முறிந்து விழுந்த மரத்தை, கொட்டும் மழையிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் துண்டு துண்டாக வெட்டி சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் படியில் ஈடுபட்டனர்.
மரம் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு சுமார் 1மணி நேரத்திற்கும் மேல் போராடி மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் இரவு நேரத்தில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.