எருமை கிடாக்களை பலியிட்ட பக்தர்கள் - திண்டுக்கல் அருகே நடைபெற்ற விநோத திருவிழா

By

Published : Jul 14, 2023, 2:50 PM IST

thumbnail

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே அம்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ வண்டி காளியம்மன் கோயில் உற்சவ திருவிழா நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த திருவிழாவானது கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 11ஆம் தேதி மாங்கரை ஆற்றுக்குச் சென்று கரகம் பாவித்து கோவில் வந்தடைந்தது. பன்னிரெண்டாம் தேதி புதன்கிழமை மாவிளக்கு எடுத்தல், பூச்சட்டி எடுத்தல், அலகு குத்தி பொங்கல் வைத்து தங்களது வேண்டுதல்களைப் பக்தர்கள் நிறைவேற்றினர். பின்னர் இரவு கோயிலின் முக்கிய நிகழ்வான உற்சவ மூர்த்தி அம்மன் அலங்கரிக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க, தேர்ப் பவனி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, முக்கிய தெருக்களின் வழியாகப் பூஜைகளை ஏற்று அம்மன் திருத்தேர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக நேர்ந்து விட்ட எருமை கிடாக்களைப் பலியிட்டனர். மாங்கரை, அம்மாபட்டி, கன்னிவாடி, ரெட்டியார் சத்திரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதியில் இருந்து 28 எருமை கிடாக்களைப் பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர்.

மேலும் நாளை (ஜூலை 15) முளைப்பாரியுடன் கரகம் எடுத்து திருவிழா முடிவடையும் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.