Viral Video: தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நீரில் மிதந்தபடி ஆசனங்கள் செய்து அசத்திய முதியவர்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18154881-thumbnail-16x9-tut.jpg)
தூத்துக்குடி: வெயில் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்த 76 வயது முதியவரின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 76) நல்லாசிரியர் விருது பெற்ற இவர் பால்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். சண்முகசுந்தரம் தனது 12 வயது முதல் சிலம்பம் பயின்று, தற்போது ஆழ்வார்திருநகரி கோல்ட் ஸ்டார் சிலம்பம் பயிற்சி பள்ளியில் கிராண்ட் மாஸ்டராக உள்ளார்.
சிலம்பம் மட்டுமின்றி கராத்தே, வில்வித்தை, யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக சண்முகசுந்தரத்திடம் பயின்று வரும் பலர் சர்வதேச போட்டிகளில் பதகங்களை வென்று குவித்துள்ளனர். சண்முகசுந்தரம் சிலம்ப கலைமுதுமணி விருதும் பெற்றுள்ளார். கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார் சண்முகசுந்தரம்.
இதற்காக தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஶ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்த படி விதமாக சூரிய நமஸ்காரம், பூமாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்தார். தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி 76 வயதுடைய சிலம்பம் மாஸ்டர் சண்முகசுந்தரம் தண்ணீரில் மிதந்தபடி யோகாசனங்கள் செய்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.