சென்னை: இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. எனவே சிறிதும் சந்தேகமின்றி இஞ்சியைப் பலவழிகளில் உணவில் சேர்க்கிறோம். இஞ்சி டீயாக, மசாலாவாக, ஊறுகாயாக, மாஇஞ்சி என பல வகைகளில் இஞ்சியை உட்கொண்டு பலனை பெறுகிறோம். ஆனால் இஞ்சியை சமைக்கும் போது, ஒவ்வொரு முறையும் தவறு இழைக்கிறோம். அது என்னவென்று தெரியுமா?. அதிக மருத்துவ குணமுள்ள இஞ்சியின் தோலை நீக்கி விடுவது தான். இதுவரை அப்படிச் செய்து இருந்தால் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் தூக்கி எறியும் இஞ்சி தோலை பலவழிகளில் பயன்படுத்தலாம். அவற்றை பார்க்கலாமா.
சளி, இருமலுக்கு மருந்து: மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும். இஞ்சி தோலைப் பயன்படுத்தி, இதிலிருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சி தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ளலாம். சிறிது இஞ்சிப் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தண்ணீரில் இஞ்சி தோலை கலந்து கொதிக்க வைத்து இஞ்சி டீயாகவும் குடிக்கலாம். இதனுடன் இரண்டு கிராம்பு, ஏலக்காய் சேர்ப்பது நலம்.
![இஞ்சி தோலின் பயன்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-11-2023/19964691_ginger.jpg)
உணவின் சுவையைக் கூட்ட: நாம் சமைக்கும் உணவுகளின் சுவையை அதிகரிக்கக் கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு, வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த வகையில் இஞ்சியின் தோலையும் பயன்படுத்தலாம் எனச் சமையற்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு சமைக்கும் போது, ஒரு சிட்டிகை இஞ்சித் தோலைப் போட்டால் நல்ல சுவையைத் தரும்.
பொதுவாக ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றைச் சமைக்கும் போது, அவற்றை வேக வைப்போம். இதனால் அந்த காய்கறிகளில் உள்ள பச்சை வாசனை நீங்கும். ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் இனிமேல் வேக வைக்கும் போது, அவற்றுடன் சிறிது இஞ்சி தோலைச் சேர்த்துப் பாருங்கள். உணவின் சுவை சற்று காரமாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.
இயற்கை உரம்: இஞ்சி தோலை உணவாக மட்டுமின்றி, இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். இதில் உள்ள பாஸ்பரஸ், செடிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது.
இதையும் படிங்க: உடல் எடை குறைப்புக்கு ஒரே தீர்வு.. இதை ட்ரை பண்ணுங்க..!