ETV Bharat / state

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

author img

By

Published : Jan 6, 2022, 3:59 PM IST

Sivakasi Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில், பூமாரி என்பவருக்குச் சொந்தமான சோலை பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (ஜனவரி 5) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். அதில் காயமடைந்தோர் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விபத்தில் லேசாக காயமடைந்த பூமாரி, பெருமாள் ஆகிய இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் கருப்பசாமி, செந்தில்குமார், காசி, அய்யம்மாள், முனிசாமி ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

விபத்துக்கான காரணம்

பூமாரி என்பவர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று பட்டாசு ஆலை செயல்பட்டுவந்துள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் ஏழு அறைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் இந்தப் பட்டாசு ஆலையில் உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் என்று சொல்லக்கூடிய பச்சை உப்புவைப் பயன்படுத்தி சரவெடி, தரை சக்கரம், பொரிவானம், வாணவெடி உள்ளிட்ட பல வெடிகளைச் சட்டவிரோதமாகத் தயார்செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 5) வழக்கம்போல், காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடும்போது, மணி மருந்து என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர், பட்டாசு வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

இதையடுத்து ஆலை உரிமையாளர் பூமாரி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.

புது ஆண்டு பிறந்து நான்கு நாள்களில் மாவட்டத்தில் இரண்டு பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி தேர்வு எழுத வர வைத்த கல்லூரி- மாணவர்கள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.