காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் என்னும் ஊரில் பிறந்தவர் கூரத்தாழ்வான். இவர் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெருமாளிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக பெரும் செல்வந்தரான கூரத்தாழ்வான், தான் எந்த நிலையிலும் எம்பெருமானின் சொத்துகளை விட, மிக அதிக சொத்துகள் உள்ளவன் என்ற நிலை இருக்கக்கூடாது என்று எண்ணி, தன் சொத்துகள் அத்தனையையும் மற்றவர்களுக்குப் பிரித்து கொடுத்துவிட்டு, துறவறம் பூண்டார்.
ராமானுஜரின் மீது பக்தி கொண்டு, அவரின் முக்கியமான சீடரானார். ஒரு சமயம் கூரத்தாழ்வான், ராமானுஜரை காப்பாற்ற அவர் வேடத்தில் குலோத்துங்க சோழனை சந்தித்து வாதிட்டார், அச்சமயம் அரசன் கூரத்தாழ்வான் கண்களை பிடுங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆழ்வானோ அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் தன்கண்களை தானே பிடுங்கிக் கொண்டார்.
இதுபோன்ற பல சிறப்புகளுடைய கூரத்தாழ்வானின் திருநட்சத்திரமான நேற்று (பிப்.03) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கூரத்தாழ்வான் சன்னதியில் கூரத்தாழ்வானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கூரத்தாழ்வான் பல்லக்கில் எழுந்தருள திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்தனர்.