ETV Bharat / state

ஒன்றாகப் படித்த ’இரட்டை வாலுகள்’ 40 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்!

author img

By

Published : Nov 7, 2020, 8:20 PM IST

Updated : Nov 7, 2020, 11:04 PM IST

விருதுநகர் : பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் படித்த தோழிகள் இருவர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாசுக் கடையில் பார்த்து மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.

40 year old love story
40 year old love story

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவகாசிப் பட்டாசுகள்தான்! இந்தியாவின் ஒட்டு மொத்த பட்டாசு தேவையில் 90 விழுக்காட்டை சிவகாசி பட்டாசுகள் பூர்த்தி செய்கின்றன.

இருப்பினும், சீன பட்டாசுகளின் வருகை, காற்று மாசு காரணமாக பட்டாசுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களும் சரி, விற்பனையாளர்களும் சரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்த பள்ளித் தோழிகள் பட்டாசுக் கடையில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.

கடந்த முறை விருதுநகர் நகராட்சி சேர்மனாக இருந்தவர் சாந்தி மாரியப்பன். இவர் தற்போது சிவகாசி அருகே பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல அவர் தனது கடையில் விற்பனையை கவனித்து வந்தார். அப்போது, கடைக்கு வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் சாந்தி மாரியப்பனுக்கு இன்ப அதிர்ச்சி.

ஏனென்றால், கடைக்கு வந்த தோழி வேறும் யாரும் இல்லை...சாந்தி மாரியப்பனின் பள்ளித் தோழி சாந்தி செல்வராஜ். இவர்கள் இருவரும், மூன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை திருத்தங்கலில் உள்ள பள்ளியில் ஒன்றாகப் படித்த இணைபிரியா தோழிகள்.

பள்ளிப்படிப்புக்கு பின், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். ஸ்மார்ட்போன், இணையதளம் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்கள் ஏதும், அப்போது இல்லாததால் இருவருக்கும் இடையே எந்தத்தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

தொடர்பு இல்லாமல் போனாலும்கூட, இருவரும் பள்ளி நட்பு குறித்த இனிய நினைவுகளை சுமந்தபடியே இருந்தனர். இதனால்தான் கடைக்குள் நுழைந்த பள்ளித் தோழியை நொடிப்பொழுதில் சாந்தி மாரியப்பனால் அடையாளம் காண முடிந்தது.

இது குறித்து பட்டாசுக் கடையின் உரிமையாளர் சாந்தி மரியப்பன், "இன்று நான் கடையில் விற்பனையை கவனித்து வந்தேன். அப்போது பெண் ஒருவர் கடைக்கு பட்டாசுகளை வாங்க வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி. ஏனென்றால், அவர் எனது நெருங்கிய பள்ளித்தோழி சாந்தி செல்வராஜ்.

பள்ளியில் படிக்கும்போது நாங்கள் எப்போதும் ஒன்றாகதான் இருப்போம். அப்போது ஆசிரியர்கள்கூட, 'இந்த ரெட்டையை பிரிச்சதான் ஸ்கூல் உருப்படும்' என்பார்கள். அப்படிப்பட்ட நெருங்கிய தோழிகள் நாங்கள்.

பள்ளி காலத்திற்குப் பின் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த எங்களை தற்போது இந்தப் பட்டாசு ஒன்றாக இணைத்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒன்றாகப் படித்த ’இரட்டை வாலுகள்’ 40 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்!

40 ஆண்டுகளுக்கு பின், பள்ளித் தோழியைக் கண்டதும் இருவருக்கும் பேச்சு வரவில்லை, ஆனந்தக் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. இருவரும் பாசப்பிணைப்போடு கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்

இதுகுறித்து பட்டாசு வாங்க வந்த பள்ளித்தோழி சாந்தி செல்வராஜ் கூறுகையில், "பட்டாசுகளை வாங்க கடைக்குள் நுழைந்தபோது நான் பார்த்தது என் பள்ளித்தோழியை! 40ஆண்டுகளுக்கு பிறகு இவரை பார்த்ததே எனக்கு தீபவாளி கொண்டாடியதைப் போல இருந்தது" என்றார் மகிழ்ச்சியுடன்.

சில ஆண்டுகளுக்கு பின் நண்பர்களை பார்க்கும்போதே, "உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே" என்று யோசிக்கும் நபர்களுக்கு மத்தியில், 40 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகப் படித்த தோழிகள் இணைந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அதி நவீன ஆண்ராய்ட் தலைமுறைக்குப் புதிதாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் பேஸ்புக், வாட்ஸ்அப் இல்லாத காலத்து நட்பு!

இதையும் படிங்க: இந்து-இஸ்லாமிய குடும்பங்களை உறவுகளாக மாற்றிய கோவிட்-19

Last Updated : Nov 7, 2020, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.