விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அமைந்துள்ளது. இந்த மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலை பாதுகாக்கப்பட்ட புலிகள் வாழும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
இருப்பினும் வன உயிரின அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், நேற்று (பிப். 16)ராஜபாளையம் அருகே புல் பத்தி காட்டுப்பகுதியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான யானைத் தந்தங்கள் 2 கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சுந்தரராஜபுரம் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் யானையை வேட்டையாடிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
வனத்துறையினரின் மெத்தனப்போக்கு
இங்குள்ள வனப் பாதுகாவலர்கள் உட்பட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் எண்ணற்ற வனவிலங்குகள் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் மூலம் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் காடுகள் அழியும் நிலை ஏற்படலாம் என வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனைத் தடுக்க வேண்டிய வனக் காவலர்கள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எதிர்கால குற்றங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் நவீன ஆயுதங்கள் மூலம் வன விலங்குகள் கொல்லப்படுவதால் வனத்திற்குள் நக்சலைட் நடமாட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சாதனைகளை கூறி ஓட்டு கேளுங்கள் - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி