ETV Bharat / state

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:40 AM IST

Updated : Nov 14, 2023, 9:33 AM IST

School Leave for Rain
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School Leave for Rain: தொடர் கனமழை காரணமாக விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுத்திருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் தொடர் மழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதே போன்று, தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார். மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பாலிடெக்னிக்குகளில் இன்று (நவ.14) நடைபெறுவதாக இருந்த பட்டயத் தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், அவ்வாறு ஒத்தி வைக்கப்படும் இத்தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் dte.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக அறிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Last Updated :Nov 14, 2023, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.