ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: உயர்த்தப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மதிப்பூதியம்!

author img

By

Published : Jun 18, 2023, 1:19 PM IST

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: உயர்த்தப்பட்ட திருவள்ளுவர் பல்கலை ஆசிரியர்களின் மதிப்பூதியம்
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: உயர்த்தப்பட்ட திருவள்ளுவர் பல்கலை ஆசிரியர்களின் மதிப்பூதியம்

வேலூர்: வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இதில் சுமார் இரண்டரை லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதேநேரம், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம், அகவிலைப்படி மற்றும் பயணப்படி உள்ளிட்டவை உயர்த்தப்படாமல் இருந்தது.

இளநிலைப் பாடப் பிரிவுகளில் ஒரு தாளுக்கு ரூ.12, முதுநிலை பாடப் பிரிவுகளில் ஒரு தாளுக்கு ரூ.15 வீதம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. இதனை உயர்த்தி இளநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.16க்கு அதிகமாகவும், முதுநிலை பாடப் பிரிவில் ஒரு தாளுக்கு ரூ.20க்கு அதிகமாகவும் வழங்க வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஆண்டனி பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தியில், மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் விரைவில் தொடங்க இருக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அனைத்து தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அனைத்து துறைகளுக்கும் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) விஜய பாஸ்கரன் நேற்று முன்தினம் (ஜூன்16) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘‘திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2023 - 2024ஆம் கல்வியாண்டு முதல் பேராசிரியர்களுக்கான மதிப்பூதியம் திருத்தப்பட்டு வழங்கப்படும். அதன்படி, இளநிலை பாடப் பிரிவில் ஒரு தாளுக்கு ரூ.15, முதுநிலை பாடப் பிரிவில் ஒரு தாளுக்கு ரூ.18, எம்பில் பாடப் பிரிவில் ஒரு தாளுக்கு ரூ.28, முகாம் அலுவலர் தினப்படி ரூ.500,

கூடுதல் முகாம் அலுவலரின் தினப்படி ரூ.400, காவலாளி, தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட உதவியாளர்களுக்கு தினப்படி ரூ.120 ஆகவும், பேராசிரியர்களின் பயணப் படியாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.6 மற்றும் 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால் அகவிலைப்படி ரூ.200, 13 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருந்தால் அகவிலைப்படி ரூ.300, மலைப் பிரதேசமாக இருந்தால் அகவிலைப்படி ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஆண்டனி பாஸ்கரன் கூறுகையில், ‘‘ஏற்கனவே துணைவேந்தர் உறுதியளித்தபடி நடப்பு கல்வியாண்டில் இருந்தே மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால், அடுத்த கல்வியாண்டில் இருந்து உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு எங்கள் தரப்பில் அதிருப்தி தெரிவித்து, துணைவேந்தருக்கு கடிதம் எழுதி உள்ளோம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு துணைவேந்தரை சந்திக்க உள்ளோம். அவர் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

இதையும் படிங்க: திருவள்ளுவர் பல்கலை.யில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.