ETV Bharat / state

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்துத் தேர்தலில் வெற்றி.. திமுக தலைவர் மீது வழக்குப்பதிவு..

author img

By

Published : Jan 2, 2023, 10:53 PM IST

வேலூர் அருகே போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரமுகர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி

வேலூர்: கடந்த 2020ம் ஆண்டு தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

இந்த தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் பதவி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் கல்பனா சுரேஷ் என்பவரும் அவரை எதிர்த்து பாக்கியராஜ் என்பவரும் போட்டியிட்டனர். இதில், கல்பனா சுரேஷ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஊராட்சிமன்றத் தலைவராக உள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் முறைகேடாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை சமர்ப்பித்து வெற்றி பெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பாக்கியராஜ் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட 'விழிக்கண்' குழு நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் என்பவர் ஆதிதிராவிடர் சாதி சான்றிழை சமர்ப்பித்தது தெரியவந்தது. இந்த புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கல்பனா சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பின்பு, தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவரின் (செக் பவர்) காசோலையை முடக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும்/ ஊராட்சிகளின் ஆய்வாளருமான குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு அறிவிப்போ அல்லது புதிய தலைவர் பொறுப்பேற்கும் வரை அணைக்கட்டு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் காசோலை (செக் பவர்) ஒப்டைப்புக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், இந்த செயல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில்,வேலூர் மாவட்டம் தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது எஸ்சி எஸ்டி பிரிவு மோசடி செய்த பிரிவு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வேப்பம்குப்பம் போலீசார் கடந்த டிசம்பர் 31 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கல்பனா சுரேச்ஷின் போலி ஜாதிச் சான்றிதழை ரத்து செய்து உள்ளனர். விரைவில் கல்பனா சுரேஷ் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி

இதையும் படங்க: பெற்றோர் எதிர்ப்பை மீறி பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.