ETV Bharat / state

Aavin Milk: ஆவின் பால் திருட்டா? - ஒரே நம்பரில் இரு மினி லாரிகளால்.. வேலூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 7, 2023, 12:34 PM IST

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்வதற்காக ஆவின் அலுவலகத்திற்கு ஒரே பதிவு எண் கொண்ட இரு மினி லாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால் திருட்டா? - ஒரே பதிவெண் கொண்ட இரு மினி லாரிகளால் பரபரப்பு
ஆவின் பால் திருட்டா? - ஒரே பதிவெண் கொண்ட இரு மினி லாரிகளால் பரபரப்பு

வேலூர்: சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகமான ஆவின் இயங்கி வருகிறது. இங்கு இருந்து சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பால் முகவர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது.

இந்த ஆவின் பால் வேலூர் உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள முகவர்கள் கடைகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த முறையில் மினி லாரிகள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் பாக்கெட்களை எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த வாகனங்கள் ஆவின் அலுவலகத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளன.

அங்கு உள்ள நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள், வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் வந்த நேரம் உள்ளிட்டவற்றை வழக்கம்போல் குறிப்பெடுத்து எழுதி உள்ளனர். அப்போது, ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு மினி லாரிகள் ஆவின் அலுவலகத்திற்கு உள்ளே வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதனை உறுதி செய்வதற்காக காவலாளிகள் வாகனங்கள் பால் பாக்கெட் ஏற்றிக் கொண்டிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அந்த நேரத்தில், அங்கு ஒரே பதிவெண்கள் கொண்ட இரண்டு மினி லாரிகள் நிற்பதைக் கண்டு காவலாளிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர், உடனடியாக காவலாளிகள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அங்கு வந்து நேரில் பார்வையிட்டு உறுதி செய்த ஆவின் உயர் அதிகாரிகள், வண்டிகளில் பால் பாக்கெட் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தக் கூறி உள்ளனர். மேலும், ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு மினி லாரிகள் அருகில் இருப்பது குறித்தும், போலி பதிவெண் கொண்ட லாரி பற்றியும் ஓட்டுநர்களிடம் விசாரித்துள்ளனர்.

ஆனால், இதற்கு அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, ஒரே பதிவு எண் கொண்ட வாகனங்கள் அங்கு இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு, ஆவின் அலுவலகத்திற்கு உள்ளேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆவின் அலுவலகத்திற்கு வந்து மினி லாரிகளின் ஆவணங்களை ஆய்வு செய்து உள்ளனர். ஆய்வின் முடிவில் போலியான பதிவெண் மூலம் லாரி இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால், உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல அரசியல் பிரமுகர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.