ETV Bharat / state

'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'

author img

By

Published : Jul 21, 2021, 4:51 PM IST

Updated : Jul 21, 2021, 5:02 PM IST

நளினி, முருகன், சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளுமே முன்விடுதலை கோரி மனு அளித்துள்ளதாக வேலூர் மத்திய சிறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

சிறை ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.ரகுபதி
சிறை ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.ரகுபதி

வேலூர்: தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றை சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று (ஜூலை 21) நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அனைத்து வகை குற்றவாளிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்து, சிறையில் உள்ள சமையல் கூடம், குற்றவாளிகள் தங்கியிருக்கும் அறைகள், கைதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சிறை நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார்.

நீண்டநாள் விடுப்பு வழங்க கோரிக்கை

மேலும் அங்கு நடைபெறும் வேளாண்மை, தோல் தொழில் ஆகியவை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

வேலூர் மத்திய சிறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சர் எஸ். ரகுபதி
வேலூர் மத்திய சிறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்கள் மத்திய சிறையில் 742 பேரும், பெண்கள் தனிச்சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள மருத்துவமனை, சமையல் கூடம், கைதிகள் தங்கும் அறைகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்யப்பட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளையும் சந்தித்துக் குறைகள் கேட்டறியப்பட்டன. முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டனர்.

நீதிமன்ற அனுமதி பெற்றால் நடைமுறைப்படுத்த தயார்

எங்களால் 30 நாள்களுக்கு மட்டும்தான் விடுப்பு வழங்க முடியும். அதைத் தாண்டி கூடுதலாக 30 நாள்கள் வழங்க முடியும். ஆனால், நீண்ட விடுப்புக்கு அவர்கள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றால், அதை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

சிறை ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி

வேலூர் சிறையில் ஷூ, பெல்ட், மருத்துமனைக்குத் தேவையான பேன்டேஜ் போன்றவை தயாரிக்க அளிக்கப்பட்ட பயிற்சியின்கீழ் கைதிகள் பணியாற்றுகின்றனர். இதன்மூலம் மாதம் ரூ.6000 வரை சம்பாதிக்கின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படியே செயல்பட முடியும். இது குறித்து உயர் நீதிமன்றத்திலிருந்து பரிந்துரைகள் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனு தாக்கல்செய்தால் பரோல்

சிறைக் காவலர்களுக்கும் கரோனா நிதியாக ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். ஏற்கனவே வேலூர் சிறைக் கைதிகளால் ஒரு பெட்ரோல் சேமிப்பு நிலையம் நடத்தப்பட்டுவருகிறது.

இதேபோல வேலூரில் கூடுதலாக ஒன்று உள்பட, தமிழ்நாட்டில் மேலும் ஆறு இடங்களில் கைதிகளால் நடத்தப்படும், பெட்ரோல் சேமிப்பு நிலையம் திறக்கப்படும். சிறைக் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்துச் சிறைவாசிகளுமே முன்விடுதலை கோரிதான் மனுக்களைக் கொடுத்திருக்கின்றனர். நளினி, முருகனுக்கு அவரது குடும்பத்தினர் மனு தாக்கல்செய்தால் 30 நாள்கள் பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைதி தற்கொலைக்கு சிறைக்காவலர்கள் காரணமல்ல

பழுதடைந்த கிளைச் சிறைகளைப் புதுப்பிக்க நிறைய நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பழுதான, மிக மோசமான கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதியதாகக் கட்டப்பட்டுவருகின்றன.

சிறையினுள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது வைக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தின் மூலம், போதைப்பொருள்கள் உள்ளே கொண்டுசெல்லப்படுவது வெளிப்படையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையிலிருந்து பரோலில் சென்ற கைதி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. சிறைக் காவலர்கள் மிரட்டியதாகக் கூறுவது உண்மையல்ல. அவர் ஏற்கனவே ஒன்பது முறை பரோலில் சென்றுவந்துள்ளார். ஆக அவரை மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்றார்.

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுக தொண்டர்கள்

ஆய்வின்போது கைத்தறி அமைச்சர் காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி, சிறைக் காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் ஆய்வின்போது, சிறைக் காவலர்களின் தடுப்பை மீறி உள்ளூர் திமுகவினர் சுமார் 50 பேர் வரை, அமைச்சருடன் சிறையின் உள்ளே சென்றனர். திமுக தொண்டர்களின் இச்செயல் சிறை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கேரள அரசியலில் கால்பதித்த முதல் திருநங்கை தற்கொலை!

Last Updated : Jul 21, 2021, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.