ETV Bharat / state

அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

author img

By

Published : Aug 10, 2023, 9:29 AM IST

Updated : Aug 10, 2023, 12:36 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

minister ponmudi
minister ponmudi

வேலூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து உள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார்.

இதன்படி, 1996ஆம் ஆண்டு மே 13 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை காலமாக எடுத்துக் கொண்டு, 2002ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தற்போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு 124வது வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) பிற்பகல் அல்லது மாலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, எந்த காரணத்திற்காக வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க எடுத்துள்ளது என லஞ்ச ஒழிப்புத்றை தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டப்படி சந்திப்போம்" - அமைச்சர் பொன்முடி ஆவேசம்!

Last Updated : Aug 10, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.