வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் அதிகபட்சமாக 100 டிகிரியைக் கடந்து 104.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலேயே வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது வரை வெயில் சுட்டெரித்து வருகிறது.
மார்ச் 16ஆம் தேதி 101.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. இதையடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி 103.3 டிகிரி பாரன்ஹீட்டும், 26ஆம் தேதி 102.2 டிகிரி பாரன்ஹீட்டும் பாதிவாகியிருந்தது. நேற்று (ஏப்.27) 101.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி மதிய வேளையில் உக்கிரமாக சுட்டெரித்தது.
வெயிலால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. நடப்பாண்டில் அதிகபட்சமாக 104.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. டிகிரி செல்சியஸில் இதன் அளவு 40.3 டிகிரி ஆகும்.
கடும் வெயிலினால், சாலைகளில் கானல் நீர் தென்பட்டதோடு, அனல் காற்று வீசியது.
இந்த வெயிலின் கொடூர தாண்டவத்தை தாங்க இயலாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்; தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரிப்பு!