ETV Bharat / state

காட்பாடியில் நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமிப்பு - பொதுமக்களுக்கு இரண்டு நாள் கால அவகாசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:37 AM IST

Katpadi: காட்பாடி அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
காட்பாடியில் நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமிப்பு

காட்பாடியில் நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட அம்முண்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓரமாக உள்ள இடங்களை, சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறையின் உட்கோட்ட உதவி பொறியாளர் குமரேசன் தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையினர், அப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்திருந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினரின் ஆக்கிரமிப்பு பணி குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: திருவல்லிக்கேணியை தொடர்ந்து ஆவடியில் அடுத்தொரு பசு மாடு தாக்குதல்.. கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை துரத்திய வீடியோ!

இதனையடுத்து, பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் குணராஜன் திருவலம், உதவி ஆய்வாளர் சிலம்பரசன், மாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிகாரிகளிடம் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இது குறித்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் குமரேசன் கூறுகையில், “இந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்.. தந்தையை இழந்த குடும்பத்திற்கு அன்புச்சீர்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.