ETV Bharat / state

திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - ஜி.கே. வாசன் பேட்டி

author img

By

Published : Jun 26, 2023, 1:19 PM IST

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வைத்து நடைபெற்றது. அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

g k vasan
ஜி கே வாசன்

திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - ஜி.கே. வாசன் பேட்டி

திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திருச்சியில் வைத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'தமிழகத்தில் விவசாயிகள் அனைவருக்கும் குறுவை சாகுபடிக்கான தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு, தாமதமாக காப்பீடு நிறுவனங்களை அறிவித்ததால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டு காலத்தே பயிர்க்காப்பீட்டு திட்டத்தை அறிவித்து உதவ வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், ஆற்றில் 10 அடிக்கு மேல், மட்டம் குறைந்ததால், கொள்ளிடம் முக்கொம்பு பாலத்துக்கு கீழ் நீர் கசிவு ஏற்பட்டு, தூண்கள் சரிந்து பாலம் இடிந்தது. அதனால், பல கோடி செலவு செய்து புதிய அணைப்பாலம் கட்டப்பட்டது.

மாயனுார் கதவணைக்குக் கீழ் பகுதியில் மண் அள்ளியதால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, பல கோடி செலவிட்டு, மறு சீரமைப்புப் பணி நடைபெற்றது. கல்லணையிலும் கான்கிரீட் தளத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், பல கோடி செலவு செய்து மறு சீரமைப்பு செய்யப்பட்டது.

தற்போதும், முக்கொம்பு அணைப் பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு, 35, 38 ஆகிய ஷட்டர்களின் தூண் நகர்ந்து கான்கிரீட் தளத்துக்கு கீழ் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளது. பெரு வெள்ளம் ஏற்படும் காலத்தில் கதவணை பாலம் இடிய வாய்ப்பு உள்ளது. அதனால், நிபுணர் குழுவை வைத்து ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. அதனால், தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தர வேண்டிய 10 மற்றும் 31.24 டி.எம்,சி., தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பயிர் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, கடன் வழங்க வேண்டும்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு, கிலோ 150 ரூபாய் என்று நிர்ணயம் செய்த நேரடியாக, கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். குறுவை சாகுபடி துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான கடன் மற்றும் விதை இடுபொருட்கள் தாராளமாக கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடந்த சம்பா பருவத்தில், ஏரி குளங்களில் தண்ணீரை நம்பி பயிர் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கணக்கெடுத்து, இழப்பீடு வழங்க வேண்டும். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதியில், கொள்ளி மலையிலிருந்து வி.மேட்டூர் வழியாக ஆகாய கங்கை தீர்த்த அருவியின் மூலம் 2,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது. அப்பகுதியில் விளையும் சீரகச் சம்பா, பாசுமதி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், நீட் தேர்வில் வெற்றி பெற்ற நரிக்குறவர் இன மாணவி கோகிலா போன்றவர்களை, தமிழக அரசு அடையாளம் கண்டு, சிறப்புக் கவனம் செலுத்தி, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட செய்தி'' என்றார்.

இதையும் படிங்க: அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறது பாஜக - பாலகிருஷ்ணன்

''ஒத்த கருத்து ஏற்படாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் முதல் சுற்றிலேயே நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கத் தவறி தோல்வி அடைந்துள்ளது. அவரவர் மாநிலத்தில் உள்ள மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத தலைவர்கள், நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது. பல முறை எதிர்க்கட்சிகள் ஒத்தக் கருத்து என்று கூறி பல முரண்பாடுகளால், கூட்டணி முறிந்தது. அதுவே இந்த முறையும் தொடர வாய்ப்பு உள்ளது.

மேலும், நகரம் முதல் கிராமம் வரை, சாதி மத பேதம் இன்றி நாட்டை ஒன்பது ஆண்டுகள், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., அரசு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது. இந்த முன்னேற்றத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு கிடையாது. அனைத்து துறையின் முன்னேற்றமும், அனைத்து தரப்பு மக்களையும் சாரும். இதில் வேறுபாடு இல்லை. எதிர்க் கட்சிகள் கூட்டம் போட்டு, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது. லோக்சபா தேர்தலுக்காக நடத்தப்படும் இது போன்ற கூட்டங்கள், மக்கள் நம்பிக்கையை ஒரு போதும் பெறாது.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது, நீதிமன்றம் வாயிலாக, சம்பந்தப்பட்ட துறையினர் தட்டிக் கேட்கின்றனர். அதை தவறு என்று கூறுவது, தவறு செய்பவர்களை நிரபராதியாக்கும் செயலை அரசு செய்வதாக அர்த்தம். ஓட்டளித்த மக்களுக்கு, அரசு நியாயம் செய்ய வேண்டும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஓட்டளித்த மக்களை ஏமாற்றிய அரசாக செயல்பட்டு, வருமானத்துக்காகவும், லாபத்துக்காகவும் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் பெருகிக் கொண்டிருக்கிறது இதனால் பலரும் இறந்துள்ளனர்.

மேலும், பல ஊழல்கள் டாஸ்மாக் கடைகளை வைத்து நடப்பதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. குறுகிய காலத்தில், மது இல்லாத தமிழகம் உருவானால் மட்டுமே அமைதியான சூழலை பார்க்க முடியும். லோக்சபா தேர்தலில், மீண்டும் பா.ஜ., அ.தி.மு.க., மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமையும் சூழல் பிரகாசமாக உள்ளது. ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப் போக்கால், எதிர்மறை ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. அது, எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும்.

இரண்டு ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால், பல கட்சிகள் எங்களோடு இணைந்து, மக்கள் நம்பிக்கையை பெற்று, நல்லாட்சிக்கு வித்திட நினைக்கின்றன. வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக, மத்தியில் பா.ஜ., கட்சி ஆட்சி நடத்துகிறது. உலக பொருளாதாரத்தில், இந்தியா 5வது பெரிய நாடாகி இருக்கிறது. வருங்காலத்தில், 3வது நாடாக மாறும் சூழல் ஏற்படும். அதற்கு பா.ஜ., கட்சி ஆட்சித் தொடர வேண்டும்.

ஜனநாயகத்தில், யார் வேண்டுமானாலும் பொது வாழ்வுக்கு வரலாம். அதற்கு, யாரும் தடையாக இருக்க முடியாது. எந்த துறையைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். மக்கள் நம்பிக்கையைப் பெற்று, அவர்கள் செயல்படலாம். யார் நல்ல கருத்தை சொன்னாலும், நாட்டு நலனுக்காக, அதை எடுத்துக் கொள்வது நல்லது. ஓட்டுக்கு பணம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது, என்பது உண்மையான நிலைப்பாடு தான். ஜூலை 15ம் தேதி, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.