ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்!

author img

By

Published : May 9, 2022, 9:49 PM IST

விராலிமலை அருகே மூளைச்சாவு அடைந்த, லோடு ஆட்டோ ஓட்டுநரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்

புதுக்கோட்டை: விராலிமலை அருகே மூளைச்சாவு அடைந்த லோடு ஆட்டோ ஓட்டுநரின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தைக் கேட்டபின், பல்வேறு மருத்துவமனைகளுக்கு உடலுறுப்பு தானமாக கொடுக்கப்பட்டது.

மேலும், மூளைச்சாவில் இறந்தவர்களின் உடலுறுப்பைத் தேவைப்படும் பல பேருக்கு தானம் செய்யலாம் எனவும், இதன் மூலம் பலபேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் எனவும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்

பல பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்..!: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு அகற்றினர். ஒரு கல்லீரல் உறுப்பு கோயம்புத்தூர் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும் ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் இன்று(மே 9) காலை கொடுக்கப்பட்டது. மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே, பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று, அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநர் யார்?: கொடும்பாளூர் பகுதியைச்சேர்ந்த சின்னப்பன் எனும் கூலித்தொழிலாளியின் இளைய மகன் தான் முருகேசன்(27). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்விழாபட்டி அருகே தனது லோடு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முருகேசனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனைத்தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தமிழ் மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதித்தனர். அப்போது முருகேசன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று(மே8) முருகேசன் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் எடுத்துக்கூறி அரசு விதிகளின்படி, உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9-மணிக்குத் தொடங்கிய ஆபரேஷன் விடியற்காலை 4 மணிக்கு நிறைவடைந்தது. பின் தானமாக பெறப்பட்ட உடலுறுப்புகள் உரியவர்களுக்குப்பொருத்த மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையும் படிங்க: பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.