ETV Bharat / state

பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 15, 2020, 8:29 PM IST

திருச்சி: பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்கள்

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக திருவானைக்காவல் பிரதான சாலையில் உள்ள பள்ளிவாசல் பகுதியை சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் இடித்தனர்.
இதற்கு அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட கிளை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜாஹிர், பொருளாளர் முகம்மது உசேன், ரபீக், ரசூல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கோயம்புத்தூர் ரஹ்மத்துல்லாஹ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளிவாசல் இடிக்க காரணமாக இருந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலரான மீனாட்சி, பள்ளிவாசலை அவமதிக்கும் விதமாக காலணி அணிந்துகொண்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தாகக் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.