ETV Bharat / state

திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 9:24 PM IST

Trichy Farmers Protest: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 45வது நாளான இன்று விவசாயிகளுக்கு மத்திய அரசு மொட்டை அடித்து விட்டதாகக் கூறி, மொட்டை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 45வது நாளான இன்று (செப்.16) விவசாயிகளுக்கு மத்திய அரசு மொட்டை அடித்து விட்டதாகக் கூறி, மொட்டை அடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகள்:- “2016 -இல் வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தைப் பெறாமலேயே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது.

ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.

அதேபோல் ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெற முடியும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும், காவிரியில் மாதமாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, “கடந்த 45 நாட்களாக திருச்சியில் விவசாயிகள் பல்வேறு கட்ட காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. மேலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மொட்டை அடித்து விட்டதாகத் தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறினார். மேலும் மத்திய, மாநில அரசு விவசாயிகளை அடிமைகளாக நடத்துக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.