ETV Bharat / state

திருச்சி விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் - ஏன்?

author img

By

Published : Jul 28, 2023, 2:10 PM IST

திருச்சியில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி 25க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

farmers protest in trichy
திருச்சி விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்

திருச்சி விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்

திருச்சி: சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறியதாவது, "2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது.

ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.

அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்.

தனியார் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.6.2 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவணை கட்டவில்லை என்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம். காவிரியில் மேகதாது அணை கட்ட கூடாது என்றும், காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடி அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.