ETV Bharat / state

சேது சமுத்திர திட்டத்திற்காக கிளர்ச்சி - கி.வீரமணி அழைப்பு

author img

By

Published : Dec 24, 2022, 6:34 PM IST

ராமர் பாலம் இருப்பது உண்மை இல்லை என மத்திய அமைச்சர்களே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரியார் சிலைக்கு கே.என் நேரு, கி.வீரமணி மாலை மரியாதை
பெரியார் சிலைக்கு கே.என் நேரு, கி.வீரமணி மாலை மரியாதை

திருச்சி: தந்தை பெரியாரின் 49-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய உருவச்சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி.வீரமணி, "தற்போதைய திமுக அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார், அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கின அப்பொழுது சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக் கூறி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர்.அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில் நேற்று பா.ஜ.கவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார். இதை நாம் அப்பொழுது கூறினோம். தற்பொழுது பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டு உள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும், தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும்.

இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. எனவே திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையைத் திராவிடர் கழகம் சார்பில் வைக்கிறோம்.

சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காகப் போராட வேண்டும். அந்தத் திட்டம் நிறைவேறினால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இனி அவர்கள் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையைக் கூற முடியாது அதற்கு ஆதாரமாக பாஜக அமைச்சரின் கருத்தே உள்ளது. பெரியாரின் நினைவு நாளில் சேது சமுத்திர திட்டத்தைத் தொடங்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக எங்குள்ளது.. மொத்த உறுப்பினர்கள் எவ்வளவு.. கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.