ETV Bharat / state

பிராமணரல்லாத அர்ச்சகர்களுக்கு எதிராக சதியா? வயலூர் முருகன் கோவிலில் என்ன நடக்கிறது..

author img

By

Published : Nov 24, 2022, 8:55 PM IST

திருச்சி அருகே வயலூர் முருகன் கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை கோவிலிருந்து வெளியேற்ற சதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருச்சி மாவட்டம், வயலூர் முருகன் கோவிலில் அர்ச்சர்களாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், கடந்தாண்டு பணியமர்த்தப்பட்ட இருவரை பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை பிராமண அர்ச்சகர்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. திருச்சி மாவட்டம், வயலூர் முருகன் கோவிலில் பணியமர்த்தப்பட்ட ஜெயபால், பிரபு என்ற இரண்டு பிராமணரல்லாத தமிழ் அர்ச்சகர்களை அங்குள்ள பிராமண அர்ச்சகர்கள் பூஜைகள் செய்ய அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில் இருவரும் கோவில் கருவறையில் சென்று அர்ச்சனைகள் செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அங்கு ஏற்கனவே பணியிலிருந்த பிராமண அர்ச்சகர்கள், புதியதாக அர்ச்சகர்களாக பணியில் சேர்ந்த ஜெயபால், பிரபு ஆகிய இருவரையும் ஆரம்பத்திலே இருந்து கோவிலுக்குள் எந்த பணிகளையும் செய்யவிடாமல் தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கருவறைக்குள் சென்று அர்ச்சணை செய்யவிடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிராமணரல்லாத அர்ச்சகர்களுக்கு எதிராக சதியா? வயலூர் முருகன் கோவிலில் என்ன நடக்கிறது..

இதுகுறித்து அறிந்த திருச்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், மக்கள் கலை இலக்கிய அமைப்பு, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் அவ்விருவருக்கும் பணியின்போது எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது, மீண்டும் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, 'கடந்த 2021 ஆண்டு தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக பணியமர்த்தியது. அதன்படி, பிராமணர் அல்லாத தமிழர்கள் 26 பேரை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதன் ஒருபகுதியாக, வயலூர் தமிழ் கடவுள் முருகன் கோவிலில், தமிழ் அர்ச்சகர்களாக ஜெயபால், பிரபு ஆகிய 2 பேரை நியமனம் செய்தனர்.

இந்த தமிழ் அர்ச்சகர் நியமன விழாவில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அப்போது, அந்த இரண்டு தமிழ் அர்ச்சகர்களும் கருவறையில் அமைச்சர் முன்னிலையில் அர்ச்சனை செய்தனர். அதன் பிறகு, அமைச்சர் சென்ற பிறகு முன்னதாக அங்கே இருக்கும் பிராமண அர்ச்சகர்கள், தமிழ் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு இரண்டு பேரை எந்த பணியும் செய்ய விடாமல் தடுத்தனர்.

இந்த தகவல் திருச்சி அரசியல் கட்சிகள் சமூக நல அமைப்பு, மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு, தமிழ் அர்ச்சகர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அறநிலையத்துறை அலுவலர்களை சந்தித்து இதுகுறித்து மனு அளித்துள்ளனர். அதன் பிறகு பக்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து கருவறையில் தமிழ் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்ய கோரிக்கை வைத்தனர். வயலூர் முருகன் கோவிலில் பிராமண அர்ச்சகர், தமிழ் அர்ச்சகர் மீது வழக்கு தொடர்ந்தனர். பிராமண அர்ச்சகர் வழக்கின் நோக்கம் என்னவென்றால், இந்து மதத்தின் ஆகம விதிப்படி நாங்கள் 8 வயதிலிருந்து அர்ச்சனை செய்ய கற்றுகொண்டுள்ளோம்.

எங்களை தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமிக்கவில்லை. ஆகம விதியை பின்பற்றாத நபர்களை நியமனம் செய்தது, தவறு. பிறப்பால் பிராமணர் மட்டுமே, ஆகம விதிகளை கற்றுகொள்ள முடியும் என ஜெயபால், பிரபு என இருவர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், தமிழ் அர்ச்சகர்களுக்கு ஆதரவாக மக்கள் அறைகூவல் விடுக்கவேண்டும்' எனக் கோரிக்க வைத்துள்ளார்.

மேலும், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில செயலாளர் கோவன் கூறுகையில், 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் சூழ்ச்சியால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்திற்கு தடை போடப்பட்டது.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆன பிறகு அர்ச்சகர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, 26 பேரை ஆகம மற்றும் ஆகம இல்லாத கோவில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புக்கள் ஒன்றிணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில் ஆகம கோவில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆக முடியாது என தீர்ப்பு வந்துள்ளது. இது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு' என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆகம விதிமுறைகளைப் பின்பற்றிடும் அனைத்து கோவில்களிலும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர், பூசாரிகள் என நியமனம் செய்வது உள்ளிட்டவைக் குறித்து இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதன்படி, 18 வயதிலிருந்து 35 வயதுடையவர்கள் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இவ்விருவரும் இவ்வாறு அர்ச்சகர் பள்ளியில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று தேர்ச்சியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்ச்சகர் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.