ETV Bharat / state

ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் பலி.. மெடிக்கல் உரிமையாளர் கைது; திருச்சியில் நடந்தது என்ன?

author img

By

Published : Jul 31, 2023, 12:05 PM IST

திருச்சியில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவத்தில் மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியா வயது 31, இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்,ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோசியர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பிரியா தனது கணவர் சிவக்குமாருக்கு தெரியாமல் தனது தாயை அழைத்துகொண்டு கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் பச்சமலை அருகே செங்காட்டுபட்டி கிராமத்தில் மருந்தகம் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா, சம்பவம் தொடர்பாக தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார், மனைவி பிரியாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 2 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை கைது!

திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், உரிய பாதுகாப்பின்றி அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், தனது மனைவி பிரியாவின் இறப்புக்கு காரணமாக இருந்த பச்சமலை செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும் மருந்தகத்தின் உரிமையாளர் சித்ரா மீது சிவகுமார் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்‌.

இதையும் படிங்க: மதுரை சுங்கச்சாவடிக்குள் தாறுமாறாக மோதிய லாரி.. ஊழியர் பலி; 3 பேர் காயம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் விசாரணைக்கு பின்னர் சித்ராவை கைது செய்து அவரிடம் பல்வேறு கோணங்களீல் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத கலைப்பு தொடர்பாக தமிழக மருத்துவத்துறை ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.