ETV Bharat / state

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பராமரிக்க 4 வாரத்தில் நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 29, 2020, 2:17 PM IST

சென்னை : மாமல்லபுரத்தை அழகுபடுத்த நிதி ஒதுக்குவது தொடர்பாக நான்கு வாரத்தில் முடிவெடுக்க மறுத்தால் மத்திய, மாநில அரசுகளின் துறைச் செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மல்லையை அழகுப்படுத்தி பராமரிக்க 4 வாரத்தில் நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!
மல்லையை அழகுப்படுத்தி பராமரிக்க 4 வாரத்தில் நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது, பராமரிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகிய தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின் போது, மாமல்லபுரத்தை பாதுகாத்து பராமரிக்கவும், அழகுபடுத்தவும் தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதேசமயம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியிலிருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அந்த பகுதியை மேம்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்துள்ளது? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த மனு இன்று (அக்டோபர் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நாடு முழுவதும் உள்ள 16 சுற்றுலாத் தலங்களில் மாமல்லபுரம் 14ஆவது இடமாக இடம்பெற்றுள்ளது. அதன் மேம்பாட்டிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 400 பக்க அறிக்கை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறது.

கரோனா பேரிடர் காலமாக இருப்பதால் நிதி ஒதுக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது" என தெரிவித்தார். மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மத்திய அரசிடமிருந்து அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் தமிழ்நாடு காத்திருக்கிறது" என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாததற்கு, கரோனா பேரிடரை காரணமாக கூற முடியாது. நிதி ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து தெரிவிக்க இறுதியாக நான்கு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. தவறும்பட்சத்தில், மத்திய மாநில அரசுத் துறை செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். மேலும், வழக்கின் மேலதிக விசாரணை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.