திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் பெருமாள்(34).
இவர் அதே பகுதியில் ஓம்சக்தி எலக்ட்ரிகல்ஸ் என்கிற பெயரில் மின்சாதன இயந்திர பொருள்களை வைத்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் கடை நடத்தி வருகிறார்.
நேற்றைய தினம் வழக்கம்போல கடையை மூடிவிட்டு, காலை திரும்பி வந்து பார்க்கும்போது பெருமாளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வெளியேயுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் அவசர அவசரமாக கதவை திறந்து உள்ளே பார்த்ததில், தன்னுடைய கடையில் விலை உயர்ந்த காப்பர் ஒயர்கள், காயல்கள், 15 நீர்மூழ்கி மோட்டார்கள் என சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனதை உணர்ந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலாளியை தாக்கி அம்மன் கழுத்தில் இருந்த தாலி கொள்ளை!