திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டம், மாவட்ட பிரிவினைக்கு பிறகு ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டன. ஒன்றியங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு புதிய பள்ளிகள் புதிய ஒன்றியங்களுடன் இணைக்கப்பட்டன. அதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பணி மூப்பு ஆகியவை பாதிக்கப்படுகிறது.
எனவே, ஒன்றியத்திற்கு, மற்ற துறைகளில் விருப்ப மனு பெற்று மாறுதல் வழங்கியதைப் போல், பள்ளிக் கல்வித் துறைக்கும் மாறுதல் வழங்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு தேதிகளில் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் மாநில கல்வி பள்ளிக் கல்வி ஆணையாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
அந்த உத்தரவில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தனது விருப்பமான தாய் ஒன்றியத்திற்கு சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடக்கக் கல்வித் துறைக்கு என்று தனியாக ஆர்டர் வரவில்லை என்று மறுக்கிறார்.
எனவே நாங்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இப்போதும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றனர்.