ETV Bharat / state

18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்காக தூத்துக்குடியில் 26,500 தடுப்பூசிகள் தயார்

author img

By

Published : May 24, 2021, 7:48 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள 26,500 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி

கரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே சரியான ஆயுதம் என்பதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் எல்லா மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நகரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 7 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த முகாம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. அனைவருமே தடுப்பூசி போடத் தயாராகி வருகின்றனர் என அவர் கூறினார்.

மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன், கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கரோனா பராமரிப்பு மையத்திற்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.