ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை - நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு

author img

By

Published : Feb 25, 2020, 1:02 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் நேரில் ஆஜரானார். ரஜினிகாந்துக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து எழுத்துப்பூர்வமாக பதில் மனுவை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு - ரஜினியின் வழக்கறிஞர் ஆஜர்!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு - ரஜினியின் வழக்கறிஞர் ஆஜர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 18 கட்ட விசாரணை முடிவுற்ற நிலையில், 19ஆவது கட்ட விசாரணை பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக ரஜினி, வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ரஜினி 25ஆம் தேதி (இன்று) ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தான் நேரில் ஆஜராக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி தனக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனவும், கேள்விக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக தர தான் தயாராக இருப்பதாகவும் ரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரஜினி தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி, தூத்துக்குடி ஒரு நபர் ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி ரஜினி தரப்பு கோரிக்கை மனுவினை சமர்ப்பித்தார். இதனை பரிசீலித்த நீதிபதி அருணா ஜெகதீசன், ரஜினி விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் மனுவை தாக்கல் செய்யும் வகையில், கேள்விகள் அடங்கிய நகலை ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளம்பாரதியிடம் மூடிய சீலிட்ட கவரில் வழங்கினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு - ரஜினியின் வழக்கறிஞர் ஆஜர்!

விசாரணை முடிந்து வெளியே வந்த வழக்கறிஞர் இளம்பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ரஜினி நேரில் ஆஜராவதற்கு விலக்கு கோரிய மனு மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எழுத்துப்பூர்வமாக தனது பதிலை தாக்கல் செய்வதற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான கேள்விகள் அடங்கிய நகலை மூடிய சீலிட்ட கவரில் வழங்கியுள்ளனர். அதில் ரஜினிகாந்த் தனது பதிலை பதில் மனுவாக தாக்கல் செய்வார். அடுத்து விசாரணைக்கு வரவேண்டிய தேதி மற்றும் பதில் மனு மீதான விசாரணை, பதில் மனுவை தாக்கல் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அந்தக் கவரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.