ETV Bharat / state

மழை வெள்ள மீட்பில் பட்டியலின மக்கள் தவிர்க்கப்படுகிறார்கள் - பூவை ஜெகன்மூர்த்தி குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:27 AM IST

Poovai Jaganmoorthy: தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் மு.ஜெகன் மூர்த்தி நேற்று (டிச.23) நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்
பூவை.மு.ஜெகன்மூர்த்தி

பூவை.மு.ஜெகன்மூர்த்தி பேட்டி

தூத்துக்குடி: குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை.மு.ஜெகன் மூர்த்தி நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “இயற்கையின் சீற்றத்தால் தென் மாவட்டங்கள் சீரழிந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீர் வடியவில்லை. கடந்த ஒரு வார காலமாக வீட்டின் கூரை மேல் உட்கார்ந்து, மக்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கனமழையால் ஆடுகள், மாடுகள், கோழிகள் என பல்வேறு உயிரிச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்கள், உடைமைகளை இழந்து மக்கள் நிர்கதியாக நிற்கின்றனர். மூன்று வேளை சோற்றுக்கு கையேந்தும் நிலை தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான தண்ணீர், உணவு, உடை ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், அரசு வழங்கும் நிவாரணத் தொகையான 6 ஆயிரம் ரூபாயை உயர்த்தி, 15 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை அரசும், அரசு அதிகாரிகளும் பார்க்கவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. இதனால் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் மண்ணை கவ்வும்.

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து வானிலை எச்சரிக்கை மையம் முன்னேச்சரிக்கை அறிவிப்பை கொடுத்தும், அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர், மழை பாதிப்பு குறித்து பிரதமரிடத்தில் பணம் கேட்கச் சென்றாரா, இல்லை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு சென்றாரா என்பது தெரியவில்லை.

கடந்த கால அதிமுக அரசு, மழை பாதிப்பு குறித்து வானிலை எச்சரிக்கை வந்தவுடன் முன்கூட்டியே மக்களை தயார்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் வைத்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தது. அதுபோன்று எச்சரிக்கை கொடுத்தும், திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு தற்போது மக்களை அலட்சியப்படுத்தி உள்ளது. விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். மேலும், மழை வெள்ள பாதிப்புகளில் பாகுபாடு காட்டப்படுகிறது. குறிப்பாக, பட்டியல் இன மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட முட்டை விலை.. 50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.