தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து கழுகுமலை காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பெயரில் கழுகுமலை காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த மினி லோடு வண்டியை சோதனைசெய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சீனிவாசன், கிளீனர் மது ஆகியோரைக் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
![தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-04-pan-masala-seized-vis-script-7204870_04062021231545_0406f_1622828745_276.jpg)
இந்த விசாரணையில், பெங்களூருவிலிருந்து கழுகுமலை ஆறுமுகநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் தலைமறைவாகி உள்ள குடோன் உரிமையாளர் சந்திரசேகரைத் தேடிவருகின்றனர். பறிமுதல்செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களின் மதிப்பு ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனத் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இளைஞர்களைக் குறிவைத்து போதைப்பொருள்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள்!