ETV Bharat / state

வீட்டுப்பாடம் நோட்டு எங்கே எனக் கேட்டு மாணவனை ஆசிரியர் அடித்ததாக போலீசில் புகார்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 2:24 PM IST

Teacher Assaulting a School Student: தூத்துக்குடியில் ஹோம் ஒர்க் நோட் எங்கே? எனக் கேட்டு பள்ளி மாணவனை ஆசிரியை கம்பால் சரமாரியாக தாக்கியதாகவும், அதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் எழுந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

complaint against a school teacher who assaulted a student
பள்ளி மாணவனை ஆசிரியை தாக்கியதாக புகார்

பள்ளி மாணவனை ஆசிரியை கம்பால் சரமாரியாக தாக்கியதாக புகார்

தூத்துக்குடி: கழுகுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன், கழுகுமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி சிறுவன் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த ஆசிரியை மாணவர்களிடம் வீட்டுப் பாட நோட்டை கேட்டுள்ளார்.

அப்போது அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டுப்பாடங்களை ஆசிரியையிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்று திரும்பி வந்த போது, பாதிக்கப்பட்ட மாணவரிடம் ஆசிரியை ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வரும்படி கூறியதாகவும், இதையடுத்து மாணவர் தனது பேக்கில் நோட்டை பார்த்தபோது, அது காணாமல் போய் இருந்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து தன்னுடைய நோட்டை காணவில்லை என்று மாணவர் கூறியதாகவும், இதனால் கோபமடைந்த ஆசிரியர் ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா? என்று கம்பால் மாணவனை அடித்ததாகவும், இதில் மாணவனுக்கு கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாணவர் கழுத்தில் அடிக்க முயன்ற போது மாணவர் தடுக்கவே, அவருடைய சட்டையை பிடித்து வெளியே தள்ளியது மட்டுமின்றி, "எனக்கு இருக்கும் கோபத்தில் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்று ஆவேசத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவனின் தாயாரை செல்போனில் அழைத்து, "உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை, ஆகவே உங்கள் மகனை வந்து கூட்டி செல்லுங்கள்" எனக் கூறியதாகவும், தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவனின் தாயார் பள்ளிக்கு வந்து, இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசாரும் சமாதானமாக செல்லும்படி கூறியதாக கூறுகின்றனர். இதையடுத்து சைல்ட் லைன் (Childline - 1098) மூலமாக புகார் கொடுத்துள்ளார். அவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை தாக்கியது தெரியவந்துள்ளது.

தற்போது இதில் காயமடைந்த மாணவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை மீது கழுகுமலை காவல்துறையினர் 2 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவர் கூறுகையில், "தான் வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் செய்து நோட்டை, ஆசிரியரிடம் காண்பித்து கையெழுத்து பெற்றுவிட்டேன். பிரார்த்தனை முடிந்த பின்னர் வகுப்புக்கு வந்த போது தனது நோட் காணாமல் போய்விட்டது. பின்னர் ஆசிரியை அந்த நோட்டை கேட்டு தன்னை அடித்தார். தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஆசிரியை கேட்கவில்லை.

சக மாணவர்களும் நான் நோட்டை காண்பித்து கையெழுத்து வாங்கியதை கூறினாலும், எதையும் கேட்காமல் தன்னைக் கம்பால் ஆசிரியை தாக்கி வெளியே தள்ளிவிட்டார். இதுபோன்று பல மாணவர்களை அந்த ஆசிரியை அடித்துள்ளார். ஆனால் வெளியே சொல்ல அனைவரும் பயப்படுகின்றனர்" என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் கூறுகையில், "ஆசிரியை மீது தான் கொடுத்த வழக்கினை வாபஸ் வாங்கச் சொல்லி தனக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பிரச்சனை குறித்து பள்ளியில் புகார் செய்தபோது ஆசிரியயை மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், வேண்டுமென்றால் உங்கள் மகனை வேறு பிரிவுக்கு மாற்றி விடுவோம் என்று கூறினார். அந்த ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு எந்த மாணவருக்கும் இதுபோன்று நிலை வரக்கூடாது" என தெரிவித்தார்.

தற்போது பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து கல்வித்துறை சார்பில் குழு அமைத்து உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: பெருந்துறை சிப்காட் விவகாரம்: "தண்ணீர் மட்டும் அல்ல, காற்றும் மாசடைந்துள்ளது" - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.