திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கோவிலூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் (38). இவர், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, ஆசாத்நகர் வழியாக ஆலங்காடு சென்று கொண்டிருந்தார். அப்போது, பேரூராட்சி குப்பைக் கிடங்கு அருகே அவரை ஒரு கும்பல் வழிமறித்து, அரிவாளால் தலையை துண்டித்துக் கொலைசெய்தது.
மேலும் தலையை உடன் எடுத்துச் சென்ற கும்பல் முத்துப்பேட்டை ஆசாத்நகரை கடந்தபோது, வேகத்தடையில் தலையை சாலையில் தவறவிட்டது. இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தகவலறிந்துவந்த முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் உள்ளிட்ட காவலர்கள் தலை, உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இக்கொலை தொடர்பாக சந்திரமோகன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் அமமுக பிரமுகர் ஜெகன், செந்தில்ராஜா, யோகேஸ்வரன், அருண்குமார், ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்றுவந்தது. இந்தநிலையில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜா, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
கூலிப்படைகள்
திருநெல்வேலி அம்மாசமுத்திரம் சின்னத்துரை (28), தூத்துக்குடி இலுப்பைக்குளம் கொம்பைய்யா (26), வெல்லூரைச்சேர்ந்த முத்துக்குமார் (28), பொன்னேரி பாண்டி (26), ஆதித்யநல்லூர் போஸ் (24), திருநெல்வேலி நாகு (26), ஒரத்தநாடு சேதுராயன்குடிகாடு வீரமணி (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பாராட்டு தெரிவித்தார்.