ETV Bharat / state

'இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி...!' - குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?

author img

By

Published : Apr 28, 2020, 12:17 PM IST

Updated : Apr 30, 2020, 3:31 PM IST

திருவாரூர்: மக்கள் வாழ்கிறார்கள் என்பதை ’நலமாக இருக்கிறார்கள்’என்று அரசு கணிக்கிறது, உண்மையில் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள். உதவித் தொகை போதுமானதாகயில்லை, அரசு வழங்கும் அரிசி உண்ணத்தகுந்ததாகயில்லை என முறையிடுகின்றனர். அவர்களின் கூக்குரலைப் பதிவுசெய்த காத்திரமான சிறப்புத் தொகுப்பு.

இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி....குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?
இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி....குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தன. மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானதுதான். ஆனால், அதன் பிறகான அரசின் நடவடிக்கைகளால் மக்கள் பயன்பெறுகிறார்களா? அரசு நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் அரிசி மக்களுக்கு போதுமானதாகயிருக்கிறதா? அரசு கொடுக்கும் நிவாரணம் போதுமானதா? அரசு தனிக் குழுக்களுடன் இணைந்து விளிம்புநிலை மக்கள் குறித்தும், அவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்தும் தெரிந்துகொண்டதா? இத்தனைக் கேள்விகளுக்கும், விடை ஆம் எனில், மக்கள் ஏன் இன்னும் பட்டினியாகவே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் வாழ்கிறார்கள் என்பதை ’நலமாக இருக்கிறார்கள்’ என்று அரசு கணிக்கிறது, உண்மையில் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள். உதவித் தொகை போதுமானதாகயில்லை, அரசு வழங்கும் அரிசி உண்ணத்தகுந்ததாகயில்லை எனக் கூறும், திருவாரூர் மாவட்டம் மாத்தூர் கிராம மக்களிடம் நாம் பேசினோம்.

கவிதாவும், அவர் குழந்தையும்
கவிதாவும், அவர் குழந்தையும்

பெரும்பாலானோரின் ஏக்கம் ஊரடங்கை விரைவில் தளர்த்த வேண்டும், கால நீட்டிப்பு செய்யக் கூடாது என்பதே. கரோனாவைவிட, பசியின் கொடூரம் தாங்க முடியாததாகயிருக்கிறது, எங்களை வெளியே விடுங்கள் என்கின்றனர் மாத்தூர் குடிசைவாசிகள்.

இது குறித்து ராமாயி என்பவர், “ஊரடங்கால் வெளியே செல்ல முடியவில்லை. கடைகளையும் பூட்டிவிட்டால், எங்குதான் செல்வது? அரிசி, பருப்புகூட இல்லை, கஞ்சியாவது குடிக்கலாம் என்றால், உப்பிற்குக்கூட வழியில்லை.

தெரு வழியாக, வெங்காயம், உப்பு விற்பவர்கள் இப்போது வரவில்லை. பணமில்லாமல் வெளியில் சென்றாலும் மதிப்பில்லை. விலைவாசியை ஏற்றிவிட்டார்கள், 10 ரூபாய்க்கு வாங்கும் பொருளுக்கு 20 ரூபாய் விலை வைத்தால், எங்களைப் போன்ற கூலிகள் எப்படிச் சமாளிக்க முடியும்.

மாத்தூர் சிறுவன்
மாத்தூர் சிறுவன்

குழந்தைகளுக்கு பால், சர்க்கரையென எதற்கும் வழியில்லாமல், வயிற்றுப் பசியோடு வைத்திருக்கிறோம். வயதான காலத்தில், வெற்றிலைக்கூட வாங்கிச் சாப்பிட வழியில்லை. சில கொழுந்துகளையே, ரூ.10-க்கும் அதிகமாக விலையேற்றினால், என்னதான் செய்ய முடியும். இயலாதவர்களுக்கு உதவுங்க சாமி” என வாழ்க்கையின் கசப்போடு பேசிமுடிக்கிறார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விளிம்புநிலை மக்களே அதிகமாக வாழ்கின்றனர். அதிலும், தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்துவருகின்றனர்.

உலையெரிவதை ஏக்கமாகப் பார்க்கும் சிறுவன்
உலையெரிவதை ஏக்கமாகப் பார்க்கும் சிறுவன்

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முன்வரைவோடு அரசு ஊரடங்கை பிறப்பித்திருந்தால், மக்கள் இத்தனை இடையூறுகளைச் சந்தித்திருக்க வேண்டாம். ஆனால், நோயின் தீவிரம் கருதி, ஊரடங்கு பிறப்பித்தாயிற்று. அதன் பின்னரான நடவடிக்கைகளிலாவது, அரசு விளிம்புநிலை மக்கள் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே மக்களின் ஆதங்கமாக வெளிப்படுகிறது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அஞ்சுதம் பேசுகையில், “நியாயவிலைக் கடைகளில் கொடுத்த அரிசியில்தான் சமைக்கிறேன். குண்டரிசி போன்ற அரிசிதான், அங்கு கிடைத்தது. அதைச் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை, மிகவும் சிரமப்படுகின்றனர். ஒவ்வாமையால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. அரசாங்கம் வெறும் ஆயிரம் ரூபாயில் கணக்கை முடித்துக் கொள்கிறது.

மாத்தூர் குழந்தைகள்
மாத்தூர் குழந்தைகள்

அது எப்படி எங்களுக்கு போதுமானதாகயிருக்கும் என்று அரசு நினைக்கிறது? அந்தப் பணத்தை 5 நாள்களுக்குத்தான் அதனைச் செலவுசெய்ய முடிந்தது. எனது கணவர் வேலைக்குச் சென்றால்தான், எங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கும்.

ஊரடங்கால், வேலையில்லை, சம்பளமில்லை, வெறும் தண்ணீரைக் குடித்துதான் வாழ வேண்டும். எவ்வளவு நாள்தான் தண்ணீரையே குடித்து வாழ முடியும்? இனி ஊரடங்கு பிறப்பித்தால் எங்களுக்கு அரசு அதிகமான உதவி செய்ய வேண்டும்” என்றார்.

குடிசைவாசிகளின் ஊரடங்கு நெருக்கடிகளைக் குறித்த சிறப்புத் தொகுப்பு

தண்ணீரைக் குடித்து வாழும் மக்களின் உடலில், கரோனாவை எதிர்க்கும் வலிமை எப்படி உருவாகும். சத்தான உணவுதான், நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து, உடலைக் காக்க உதவும்.

மாத்தூர் குழந்தைகள்
மாத்தூர் குழந்தைகள்

தொடர்ச்சியான ஊரடங்கு, எளியவர்களுக்கு சோற்றுக்கே வழியில்லாமல் செய்துவிட்டது. சத்தான உணவிற்கு எங்கு செல்வார்கள்? அரசு இதற்காகத் தனி வாரியம் அமைத்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விளிம்புநிலை மக்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். அதுவே, இறையாண்மையும்கூட!

இதையும் படிங்க: தினக் கூலிகளுக்குத் தரமில்லா அரிசி: அறமில்லாத செயல்!

Last Updated : Apr 30, 2020, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.