திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அருங்காட்சியம் அமைக்கப்படும். இந்த அருங்காட்சியகம் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
மேலும் அவர், நீட் தேர்வு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வு முறைகேட்டில் தமிழ்நாடு அரசுக்கு கீழ் உள்ள சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு மட்டுமே, எனவே இந்த சிபிசிஐடி விசாரணையில் நியாயம் கிடைக்காது.
நீட் தேர்வில் தரகர்கள் மற்றும் பல மாநில அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதோடு திருவாரூர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ கருவிகளை புதுக்கோட்டை மருத்துவகல்லூரிக்கு மாற்றுவதாக தகவல்கள் வெளிவருகின்றன, அவற்றை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.