திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கீரனூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எந்தவித அறிவிப்புமின்றி மூடப்பட்டதால் நெல் மூட்டைகளை வெளியில் வைத்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, கீரனூர் ஊராட்சிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை தொடர்ந்து அடுக்கி வைத்து காத்திருக்கிறோம்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் மணிகள் அனைத்தும் மூட்டைகளில் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உறவினருக்கு கரோனா பாதிப்பு: குறுஞ்செய்தி மூலம் அமைச்சர் வேண்டுகோள்!